ரெண்டு கையுமில்லை..காலுமில்லை! ஆனால் நம்பிக்’கை’ உண்டு! பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த தமிழ்!
நெல்லை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியாகி இருக்கும் வரை இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயல்படாத நிலையிலும் நம்பிக்கையுடன் படித்து 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்திருக்கிறார் நெல்லை மாணவன் தமிழ்ச்செல்வம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது.

கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளி: இந்நிலையில் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயல்படாத நிலையிலும் நம்பிக்கையுடன் படித்து 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்திருக்கிறார் நெல்லை மாணவன் தமிழ்ச்செல்வம். திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகனான தமிழ்செல்வம் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.
சாதனை: சிறு வயதில் இருந்தே இரு கை மற்றும் இரு கால்கள் செயல்படாத நிலையிலும் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என்ற வெறியோடு பள்ளிக்குச் சென்ற படித்து அவர் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் தமிழில் 88 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 76 மதிப்பெண்களும் கணக்கில் 88 மதிப்பெண்களும் அறிவியலில் 83 மதிப்பெண்களும் சமூக அறிவியலில் 85 மதிப்பெண்கள் என மொத்தமாக 420 பெண்களை பெற்றிருக்கிறார்.
சேவை எண்ணம்: பெற்றோரும் தனது நண்பர்களும் ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தில் பேரிலேயே தான் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று இருப்பதாகவும் நன்கு படித்து தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் ஒரு நல்ல பதவியில் அமர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார் தமிழ்செல்வம்.
வாழ்த்துகள்: வறுமையான சூழல் இருந்த போதும் தனது மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் அவன் படித்து பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்பதே தனது கனவு எனவும், அதற்கேற்றார் போல் தமிழ் செல்வமும் தற்போது நல்ல மதிப்பெண் பெற்றிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் என்ன படித்தாலும் படிக்க வைக்க தான் தயாராக இருப்பதாக கூறுகிறார் தமிழ்செல்வத்தின் தந்தை சசிகுமார். இப்போது பலரும் தமிழ் செல்வத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு அவரது உயர்கல்விக்கு தேவையான ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications