ரூ.14 கோடியாம்.. சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே! திமுக மீது ஆவேசமான அண்ணாமலை - அமைச்சருக்கு டார்கெட்
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான மைதான அரங்க மேற்கூரை மழை காரணமாக இடிந்து விழுந்த நிலையில், இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், ரூ.14 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர் அமரும் கேலரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சில நிமிடங்கள் நெல்லையில் கொட்டிய கனமழையின் காரணமாக அந்த மேற்கூரை இடிந்து விழுந்தது.

14 கோடி ரூபாய் செலவி கட்டப்பட்ட மேற்கூரை ஒரு மழைக்கு கூட தாக்குபிடிக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மேற்கூரை இடிந்தது தொடர்பாக திமுக அரசை விமர்சித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்து உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே துவங்கி உள்ளது.
இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications