“பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காவிட்டாலும்”.. அண்ணாமலை சொன்னத கவனிச்சீங்களா? அப்போ 25 இப்போ இப்படி!
நெல்லை: தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாவிட்டாலும், 2024 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நடைபயணத்தின் முதல் பகுதி நேற்று திருநெல்வேலியில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அண்ணாமலை, "23 நாள் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தென் மாவட்டங்களில் உள்ள 41 சட்டமன்ற தொகுதியில் நடந்துள்ளது.184 கிமீ பயனம் செய்து இந்த யாத்திரையின் முதல் கட்டத்தில் நிறைவு செய்துள்ளோம். எங்கே சென்றாலும் லஞ்ச லாவன்யம் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டில் மக்களின் வீடு தேடி எந்தவித சிபாரிசும் இன்றி மத்திய அரசின் திட்டம் சென்று சேர்கிறது.
தென் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பாதயாத்திரை, மாற்றத்திற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளது. நேர்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என இளைஞர்கள் ஆதரவு தருகின்றனர். பாஜக மீது நம்பிக்கை உள்ள காரணத்தால் தான் பெண்களுடைய ஆதரவு உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
40 தொகுதிகளையும் நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தமிழகத்தை வளர்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காவிட்டாலும் வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும். எனினும், தமிழக மக்கள் பாஜக மீதான அன்பு காரணமாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பார்கள்" எனப் பேசியுள்ளார்.
பாஜகவை தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வைக்கும் நோக்கில் நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை. 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனப் பேசி வருகிறார். அதற்கு தேவையான வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு பாஜக.
எனினும், தற்போதைய கருத்துக்கணிப்புகளில் அகில இந்திய அளவில் பாஜக ஆட்சியை பிடித்தாலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களையே பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெல்லாவிட்டாலும் மீண்டும் பாஜக ஆட்சி தான் எனப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications