அதிர்ந்து போன விஜய் ரசிகர்கள்.. நெல்லையில் ‘லியோ’ முதல் நாள் கொண்டாட்டங்களுக்கு தடை போட்ட காவல்துறை!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 'லியோ' திரைப்பட ரிலீஸையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. விஜய்யின் 67வது படமாக வெளியாகும் 'லியோ'வில் த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

நெல்லையில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ், ராம் முத்துராம் சினிமாஸ், அலங்கார் சினிமாஸ், செந்தில்வேல், ஸ்ரீ ரத்னா, அம்பாசமுத்திரத்தில் உள்ள பாலாஜி, கல்யாணி, சாத்தான்குளத்தில் உள்ள லட்சுமி, ஆறுமுகநேரியில் உள்ள தங்கம், வள்ளியூரில் உள்ள சித்ரா,க ளக்காட்டில் உள்ள ஷோமா உள்ளிட்ட திரையரங்குகளில் லியோ படம் நாளை வெளியாக உள்ளது.
இதையடுத்து, நெல்லை மாவட்டத்தில் 'லியோ' படத்திற்கான முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்தது. நெல்லையில் உள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் ஏராளமான கட் அவுட்களை வைத்துள்ளனர். இந்நிலையில், நெல்லை விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது நெல்லை மாநகர காவல்துறை.
நெல்லையில் லியோ பட முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது காவல்துறை. இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை, சார்பில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதிக சத்தம் எழுப்பும் டிஜே இசை, ஆட்டம் பாட்டங்களுக்கு திரையரங்க வளாகத்திற்குள்ளும் வெளியேவும் நடத்த அனுமதி கிடையாது. தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் திரையிடப்படுவதற்கு முன்பு ரசிகர்கள் அங்கு குவிந்து, விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், லியோ முதல் நாள் கொண்டாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளதால் நெல்லை விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'லியோ' ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையை நீக்கக் கோரி விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications