தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. ஓபிஎஸ் தரப்பை சந்திக்கிறாரா? நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்!
நெல்லை: பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பது குறித்து எதுவும் தெரியாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மோடியை வரவேற்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜகவினரும் ஓபிஎஸ் தரப்பை ஒதுக்கிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தூத்துக்குடியில் குவிந்துள்ளனர். அதற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இதன்பின் நயினார் நாகேந்திரன் வீட்டில் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் எல்.முருகன், அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அரவிந்த் மேனன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் பல லட்சம் கோடிக்கு அதிகமான திட்டங்களை நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குக் கொடுத்துள்ளார்.
140க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து, வந்தே பாரத் ரயில் போன்ற நிறைய திட்டங்களை அளித்துள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்று காங்கிரஸ் சொல்லி இருப்பது, திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகத் தான். நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவது புதிதல்ல. ஏற்கனவே பலமுறை இங்கு வந்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட ராஜேந்திர சோழனின் புகழை உலகம் எங்கும் பரப்பியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிமுகவின் பிரச்சாரம் தொடர்பான கேள்விக்கு, உருட்டும் திருட்டும் திமுகவின் கொள்கையாக உள்ளது. தமிழ்நாடு முதல்வர் பீகாரை பற்றிக் கவலைப்படுவதை விட, தமிழ்நாட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
பீகார் விவகாரம் என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு. எங்கள் கூட்டணி தொடர்பாகக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் - மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் சந்திப்பது குறித்து எதுவும் தெரியாது. அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்தும் தெரியாது என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி வரும் பிரதமரை வரவேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் மோடியை வரவேற்கும் நபர்கள் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஓபிஎஸ் சந்திப்புக்கு கடைசி நேரத்தில் அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications