திடீரென குறுக்கே வந்து முட்டிய மாடு! ஸ்கூட்டியில் போன கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. நெஞ்சே பதறுதே
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மாணவி கல்லூரிக்கு சென்றபோது அவரது ஸ்கூட்டர் மீது தெருவில் சுற்றிய மாடு திடீரென்று முட்டியது. இதில் நிலைகுலைந்து போன மாணவி ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் முறையாக அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வீடு அல்லது தொழுவத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஆனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் அப்படி செய்வது இல்லை.

ஆடு, மாடுகளை தெருவில் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த கால்நடைகளால் சாலையில் செல்வோருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி சில வேளைகளில் மாடுகள் பொதுமக்களை முட்டி காயப்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதனால் ஆடு, மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது. மீறினால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநாகராட்சி நிர்வாகங்கள் எச்சரித்தும் கூட இன்னும் பலரும் திருந்தவில்லை. இந்நிலையில் தான் திருநெல்வேலியில் சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
அதாவது திருநெல்வேலி மாநகராட்சியின் 55வது வார்டுக்குட்பட்ட தியாகராஜ நகர் அருகே திருமால்நகரை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு ஸ்கூட்டியில் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் சுவாதிகா தனது ஸ்கூட்டியில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார்.
தியாகராஜநகர் 2வது நடுத்தெருவில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஒருபுறம் சில மாடுகளும், சாலையில் இன்னொரு புறம் ஒரு மாடும் நின்றது. மாணவி சுவாதிகா ஸ்கூட்டரில் சாலையில் வந்தார். அப்போது சாலையில் தனியாக நின்ற ஒரு மாடு திடீரென்று சாலையின் மறுபுறத்துக்கு செல்ல முயன்றது. அப்போது சாலையில் வந்த சுவாதிகாவின் ஸ்கூட்டரில் மாடு ஆக்ரோஷமாக முட்டியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த சுவாதிகா தவறி கீழே விழுந்தார். அதாவது ஸ்கூட்டியில் மாடு முட்டிய பிறகு சில அடி தூரம் ஸ்கூட்டியுடன் சென்ற சுவாதிகா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் சுவாதிகா பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சுவாதிகாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் மாணவி சுவாதிகாவை தெருவில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாடுகளை தெருவில் உலவ விடாமல் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் திருநெல்வேலி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications