தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் கேம்ப்.. தாமிரபரணியில் தலைமுழுகல்.. நல்ல தீர்ப்புக்காக!
தீர்ப்பு சாதகமாக வர வேண்டும்... தாமிரபரணி மகாபுஷ்கரத்தில் நீராடிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குற
Recommended Video
திருநெல்வேலி: குடும்பத்துடன் குற்றாலம் வந்துள்ள தினகரன் ஆதரவாளர்கள் மகாபுஷ்கரம் நடைபெறுவதை முன்னிட்டு பாபநாசம் தாமிரபரணி தீர்த்தக்கட்டத்தில் நீராடிவிட்டு தீர்ப்பு சாதகமாக வர வேண்டிக்கொண்டுள்ளனர்.
குற்றாலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர் என்றதுமே தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அனைவரும் குற்றாலம் இசக்கி ரிசார்ட்டில் முகாமிட்டது ஏன் என்ற கேள்வி எழாமில் இல்லை.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வரானதும், அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு சசிகலா முதல்வராக நினைத்ததும் 2017 ஜனவரியில் பரபரப்பை பற்றவைத்தது. கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறின. முதல்வர் கனவோடு இருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரூ சிறைக்கு போக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய தினகரன் ஆதரவு அணி முளைத்தது.
ஜெயக்குமார் ஆடியோவுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமுமில்லைங்க- தங்கதமிழ்ச்செல்வன்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு
19 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கலகக்குரல் எழுப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே தமிழக அரசியல் களம் பரபரப்போடுதான் இருக்கிறது. இதில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு ஆதரவாக திரும்பியதால் தப்பினார். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கு
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால், இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தீர்ப்பு யாருக்கு சாதகம்
3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
தினகரன் ஆதரவாளர்கள் முகாம்
கடந்த ஓராண்டாகவே 18 சட்டசபை தொகுதிகள் மக்கள் பணிகள் நடைபெறாமல் முடங்கிப்போயுள்ளன என்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் குற்றச்சாட்டு. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி எம்எல்ஏக்கள் மரணமடையவே அந்த 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த நிலையில்தான் தனது ஆதரவாளர்களை அழைத்துப் பேசிய தினகரன் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம். எனவே 20 தொகுதிகளிலும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன்னதாக அனைவரும் குற்றாலம் சென்று ரிசார்ட்டில் தங்கியிருங்கள் என்று கூறவே, குடும்பதோடு கிளம்பி விட்டனர்.
குற்றாலத்தில் குதூகலம்
தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு உள்ளிட்ட பலரும் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 'இசக்கி ரிசார்ட்' முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளார் என்பதால் அனைவரும் இங்கே முகாமிட்டுள்ளனர்.
மகாபுஷ்கரம் நீராடல்
மகாபுஷ்கரம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பாபநாசம் தீர்த்தக்கட்டத்திற்கு சென்று குளித்து விட்டு அங்கே பாபநாசநாதரிடம் வேண்டுதல் வைத்துள்ளனர். குற்றால அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதரிடமும் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார். குற்றாலத்தில் சில நாட்கள் ஓய்வு எடுக்கப் போவதாகவும் விரைவில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளிலும் அமமுக சார்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் பரபரப்பு
அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய ஆடியோ வெளியானதிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார். தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். எனவேதான் அடுத்தகட்ட ஆலோசனைக்காக குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள். தீர்ப்பு வெளியான பின்னர் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ? அந்த குற்றாலநாதருக்கே வெளிச்சம்.