திமுக கூட்டணி விரைவில் உடையும்.. புகைய ஆரம்பிச்சிடுச்சு.. திரி கொளுத்திய எடப்பாடி பழனிசாமி!
நெல்லை: திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும், கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. கடந்த சில நாட்களாக மக்களின் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு போவதை அறிந்து கூட்டணி கட்சிகளே விமர்சிக்கத் தொடங்கிவிட்டன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுக உடைந்துவிட்டதாக திமுக போலியாக செய்தி பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பல இன்னல்களுக்கு மத்தியில் தான் அதிமுக தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போதும் சரி பல போராட்டங்களை அதிமுக சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் திமுகவிற்கு ஆதரவாக சிலர் எதிர்த்து வாக்களித்தனர்.
நம் கட்சியில் சில எட்டப்பர்கள் இருந்தது அப்போதுதான் கண்கூடாகத் தெரிந்தது. அப்படிப்பட்ட எட்டப்பர்களுக்கு கட்சியில் உயரிய பதவி வழங்கினோம். பல லட்சம் பேர் இரவு பகல் பாராது உழைத்து அதிமுக ஆட்சி அமைத்ததை கலைப்பதற்கு சிலர் துணை போனார்கள். அதிமுக எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திமுக நாடகம் போடுகிறது.
திமுக குடும்பத்திடம் தமிழக அரசு சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை, ஸ்டாலினாலும் முடியவில்லை. தற்போது, வாழையில் இடைக்கன்று முட்டி வருவதைப் போல் உதயநிதி வந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் பரம்பரையா?
திமுகவில் வேறு யாரும் துணை முதல்வர் பதவிக்கு வரக்கூடாதா? வேறு யாரும் ஆட்சி செய்யக்கூடாதா? கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தான் அப்படி என்பது இல்லை. எல்லா அமைச்சர்கள் குடும்பத்திலும் அப்படித்தான். அமைச்சர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.வாக, எம்.பியாக வர முடியும். அதிமுகவில் அப்படி அல்ல.
அடிப்படை உறுப்பினர் பெரிய பதவிக்கு வருவது அதிமுகவில் மட்டும்தான், அதற்கு நானே சாட்சி. நானும் ஒரு காலத்தில் மேடைக்கு கீழ்தான் நின்றிருந்தேன். நான் முதல்வராக வரவில்லையா? ஜனநாயக முறைப்படி செயல்படும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. ஜாதி மதம் இல்லாத கட்சியாக அதிமுக திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியில் வெறும் பணக்காரர்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அங்கு சாதாரண நபர்களுக்கு பதவிகள் கிடைக்காது.
அதிமுகவின் சக்தியை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி பலம் பணபலம் கூட்டணி பலம் என அனைத்தையும் வைத்து 26.52% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் கூட, 2019 விட 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றது. ஆனால், திமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டது, அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
ஆட்சிக்கு வந்த பின் திமுக எந்த திட்டத்தையும் புதிதாக செய்யவில்லை. ஆட்சிக்கு வந்து மூன்றை ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மக்கள் தலையில் திமுக அதிக கடனை சுமத்துகிறது. அடிப்படை பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததைத் தவிர ஸ்டாலின் எதையும் செய்யவில்லை.
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. மக்கள் பிரச்சனைகளுக்கு இவ்வளவு நாள் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் வாய் திறக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மக்களின் பிரச்சனை அதிகரித்துக் கொண்டு போவதை அறிந்து, பேசத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா எளிதில் கிடைக்கிறது. கஞ்சா அருந்தும் விஷமிகளால் பெண்கள் வன்கொடுமை அதிகம் நடக்கிறது.
திமுக மோசமான நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்லிக் கொண்டே இருக்கிறார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications