திகைத்துப்போன அமைச்சர்... குவியும் புகார்கள்... தென்காசி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பஞ்சாயத்து..!
தென்காசி: தென்காசி மாவட்ட திமுக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான புகார்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை திகைக்க வைத்துள்ளது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக உள்ள இவரிடம் நாளொன்றுக்கு 10 பேருக்கு குறையாமல் வேட்பாளர் தேர்வு தொடர்பான தங்கள் மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர்.
இதை அப்படியே திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லும் இவர், முடிந்தவரை சமாதானம் பேசி நிலைமையை சுமூகமாக்கி வருகிறார்.

ஊரக உள்ளாட்சி
தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. எல்லா மாவட்டங்களிலும் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் மட்டும் திமுக தேர்தல் பணிகளில் சற்று சுணக்கம் தெரிகிறது. இதற்கு காரணம் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சீட் கொடுத்து மற்றவர்களை புறக்கணித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.

வேட்பாளர் தேர்வு
இதனிடையே மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ள ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஊராட்சி கிளை கழக செயலாளர்கள், 18-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளரை தாங்களே தேர்வு செய்துவிட்டதாகவும், பல ஆண்டுகளாக திமுகவுக்காக உழைத்து வரும் ஆறுமுகப்பாண்டியனை வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சுமூகமாக
இதேபோல் தென்காசி மாவட்டத்தின் பல ஒன்றியங்களில் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக கலகக் குரல் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனு முடிந்தபிறகு வேட்பாளர் விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என்பதால், இதனை சுமூகமாக கையாண்டு வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அதிருப்தியாளர்களுக்கு வேறு சில வாக்குறுதிகளை அளித்து வருகிறாராம்.

உட்கட்சி பஞ்சாயத்து
இதனிடையே தென்காசி மாவட்டத்தில் நடப்பதை தலைமையின் கவனத்திற்கும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொண்டு செல்கிறார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக உட்கட்சி பஞ்சாயத்தை சமாளிக்கவே அமைச்சருக்கு நேரம் போதும் போதும் என்றாகிவிடுகிறதாம். இதற்கு மத்தியில் தான் துறை சார்ந்த பணிகளையும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளையும் அவர் கவனித்துக்கொள்கிறாராம்.












Click it and Unblock the Notifications