நடுரோட்டில்.. தாவிதாவி தாக்கி கொண்ட திமுகவினர்.. நெல்லையில் அமைச்சர் துரை முருகன் கண்முன்னே மோதல்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மூத்த அமைச்சரான துரை முருகன் கண்முன்னே நடுரோட்டில் திமுகவினர் 2 கோஷ்டியாக பிரிந்து தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் துரை முருகன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள நேற்று சென்றார். பொன்னக்குடியில் அதிகாரிகளுடன் ஆய்வு பணியை அமைச்சர் துரைமுருகன் மேற்கொண்டார்.

அதன்பிறகு அவர் காரில் பொன்னாக்குடியில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு விருந்தினர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஓய்வு எடுப்பதற்காக துரைமுருகன் காரில் பயணம் செய்தார்.
இந்த வேளையில் புதிய பேருந்து நிலையம் அருகே துரைமுருகனுக்கு வரவேற்பு அளிக்க திமுகவினர் முடிவு செய்தனர். பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏவும், மத்திய மாவட்ட திமுக செயலாளருமான அப்துல் வஹாப் தலைமையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அப்துல் வஹாப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் துரை முருகனை வரவேற்றனர்.

இதையடுத்து திருநெல்வேலி மேயர் சரவணன் மற்றும் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் துரைமுருகனை வரவேற்க சென்றனர். அப்போது அவர்களை அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் துரைமுருகனை பார்க்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பு ஏற்பட்டது. அப்துல் வஹாப் மற்றும் மேயர் சரவணன் ஆகியோரின் ஆதரவாளர்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் பறந்து பறந்து தாக்கி கொண்டனர். அமைச்சர் துரை முருகன் கண்முன்னே இந்த கைக்கலப்பு நடந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த சரவெடிகள் தூக்கி வீசப்பட்டன.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து துரை முருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே தான் மோதல் தொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் சரவணணுக்கு எதிராக திமுகவில் கவுன்சிலர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டத்திலேயே மேயர் சரவணணுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு நடந்துள்ளன. இந்த சம்பவம் திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications