28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில்.. வெற்றிக் கனியை சுவைக்க தயாராகும் திமுக!
தென்காசி: தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இங்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்ட திமுக சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி எம்பி தொகுதி ஆகும்.
காங்கிரஸின் கோட்டை என சொல்லப்படும் தென்காசி தொகுதியில் திமுக கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தோல்வி கண்டது திமுக. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டதே கிடையாது. மாறாக அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கிவிடும்.
கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை!
நேரடி களம்
இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக களம் காண்பது என முடிவு செய்தார். அதன்படி அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட தனுஷ் குமாரை என்ற திமுக வேட்பாளரை அறிவித்தார்.
புதிய தமிழகம் சார்பில்
அது போல் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை விட திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.
தொண்டர்கள் எதிர்பார்ப்பு
தென்காசி தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த தொகுதியில் வெற்றியை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர்.
28 ஆண்டுகளுக்கு பிறகு
28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்டு முதல் முறையாக திமுக வெற்றி என்ற சாதனையை திமுக படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தென்காசி யாருக்கு என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.