தெற்கில் வரும் பெரிய திட்டம்.. நெல்லைக்கு வரப்பிரசாதம்.. கிடைத்தது ‘கிரீன்’ சிக்னல்!
நெல்லை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். 146 ஏக்கரில் அமைகிறது சோலார் பேனல் தொழிற்சாலை. இதன் மூலம் 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைய இருக்கிறது. இந்த ஆலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாட்யூல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சோலார் செல் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி சோலார் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.

கங்கைகொண்டான் சிப்காட்டில் 313 ஏக்கரில் டாடா நிறுவனத்தின் டிபி சோலார் நிறுவனம் ஏற்கெனவே ஒரு ஆலையை அமைத்துள்ளது. இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கும் நிலையில், சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய ஆலையை அமைக்கிறது. விக்ரம் சோலார் பிரிவு தமிழ்நாட்டில் 4 ஜிகாவாட் சோலார் போட்டோவோல்டாயிக் செல் உற்பத்தி தொழிற்சாலையைத் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1260 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 வருடத்தில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்துறை முதல் மக்கள் பயன்பாடு வரையில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காக சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கத் தமிழ்நாடு திட்டமிட்டு இருந்த நிலையில், விக்ரம் சோலார் நிறுவனம், தமது ஆலையை கங்கைகொண்டானில் நிறுவுகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை மூலம் 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications