பள்ளிக்கு கட்டிடம்.. முதல்வருக்கு அம்பை சிறுமி கடிதம்.. அடிக்கல் நாட்டு விழாவில் செம சர்ப்ரைஸ்
திருநெல்வேலி: அம்பாசமுத்திரத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று சிறுமி ஒருவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், அச்சிறுமியை வைத்தே புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 100க்கும் அதிகமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இங்குள்ள கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது அது மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில், இப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இஷா எனும் மாணவி சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று முதுலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.30 லட்சம் அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கிய நிலையில், முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவியை வைத்து கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இச்சம்பவம் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது ஊர் மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி ஆராதனா, தான் படிக்கும் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் பாழடைந்து இருப்பதாகவும், எனவே புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து அப்பள்ளிக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்திருந்து அவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு சமீப காலங்களாக கூடுதல் நிதியை ஒதுக்கி வருகிறது. அதேபோல தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications