ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.. திருமாவளவன் கோரிக்கைக்கு ஜி.கே.வாசன் கூறிய பதில் என்ன?
திருநெல்வேலி: ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரியிருப்பது குறித்து ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. அதே நேரத்தில் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கும் அவசியம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பயணித்து வருகிறது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த மாநாடு நடத்தும் விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் இருந்தபடியே திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சைக்குள்ளானது.
அதைத்தொடர்ந்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவை அட்மின் பதிவிட்டு நீக்கியதாக திருமாவளவன் தெரிவித்தார். அதன்பிறகு நீக்கப்பட்ட வீடியோ தொடர்பான முழு பேச்சையும் திருமாவளவன் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளில் உள்ள தொண்டர்களும், தலைவர்களும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் தங்களுக்கு உரிமை வேண்டும் என்று கூறுவதில் தவறு கிடையாது என்பதுதான் தமிழக காங்கிரஸ் கட்சியின் எண்ணம். அதே நேரத்தில், ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தலைவர்களின் தொண்டர்களுடைய எண்ணமாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். நாம் இலக்கை முறையாக, சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் தேர்தலுக்குப் பிறகு வரும் காலத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுப்பதற்காக வாய்ப்பு உள்ளது.
முழு பூசணிக்காயை சோற்றிலே மறைக்கப் பார்க்கலாம். ஆனால், எல்லா தலைவர்களுடைய, தொண்டர்களுடைய உண்மையான நிலை இதுவாகத்தான் இருக்கும். மது ஒழிப்பை பொருத்தவரையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதில் உறுதியாக உள்ளனர் என்பதை பார்த்திருப்போம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனத் தலைவர் மூப்பனார் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை எல்லா கூட்டங்களிலும் நாங்கள் பேசி வருகிறோம்.
படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஒரு கட்சி மதுவில்லா தமிழகம் என்ற ரீதியில் ஒரு கோடி கையெழுத்தை வாங்கி ஆளுநரிடம் கொடுத்திருக்கும் கட்சி தமாகா தான். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தமாகா சார்பில் நடத்தப்பட்டுள்ளது. எனவே, மதுவில்லா தமிழகம் என்பது அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல என்றார்.











Click it and Unblock the Notifications