நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை.. குளமாக மாறிய திருநெல்வேலி பேருந்து நிலையம்.. பொதுமக்கள் அவதி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் நெல்லை பேருந்து நிலையமே ஒரு குளம் போலக் காட்சி அளித்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கடந்த நவ. 7ஆம் தேதி சென்னையில் பெய்த அதிதீவிர கனமழையால் நகரில் பல இடங்களிலும் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இயல்பு நிலை
இப்போது தான் அந்த பாதிப்புகளில் இருந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. நீர் தேங்கி பகுதிகளில் மோட்டார் உதவியுடன் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது. அதேபோல தலைநகர் சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

மீண்டும் ரெட் அலர்ட்
இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளச் சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் தயாராகி வருகின்றன. அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் கொட்டும் மழை
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வடதமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி உள்வட்டங்களிலும் இன்று கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை மாலை நல்ல மழை பெய்தது. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், சில பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் இணைப்பும் பாதிக்கப்பட்டன.

பேருந்து நிலையம்
நெல்லை மாவட்டத்தில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் நெல்லை பேருந்து நிலையமே ஒரு குளம் போலக் காட்சி அளித்தது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், "நெல்லை- தூத்துக்குடி பெல்ட்டில் மிகத் தீவிரமான மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள பகுதிக்கு இடையில் இருக்கும் மாவட்டங்களில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நாளைய தினம் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட உள்பகுதிகளில் மழை குறையும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications