நெல்லையே சில்லுனு கிடக்குது.. காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழை! பொங்கிப் பாயும் தாமிரபரணி!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை நீடிக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அணை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபங்களை மூழ்கடித்து வெள்ளநீர் செல்கிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்துக்கு மாநில பேரிடர் மேலாண்மைத்துறை வீரர்கள் விரைந்துள்ளனர்.
தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் பிரதானமான பாபநாசம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை கனமழை
பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பாபநாசம் முதல் திருநெல்வேலி வரை அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம், தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்கிறது.
தாமிரபரணி வெள்ளம்
இதனால் திருநெல்வேலி மாநகர பகுதியில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. கோவிலுக்குள் தண்ணீர் சென்றுள்ளதால் கோவிலில் இருந்து உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் மேல கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு வழக்கமான பூஜைகள் நடத்தப்படுகிறது. இன்று திருமண முகூர்த்த நாள் என்ற நிலையில் ஏராளமான திருமணங்கள் இந்த கோவிலில் நடைபெறும். அவை மேல கோயிலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை வெள்ள எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருகரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்வதால் ஆற்றின் நிறம் மாறி காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை
அது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி வீரர்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவசர காலத்துக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் மீட்பு படையினர் அங்கு தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறி வருகிறது. நாளை வரை கனமழை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உச்சகட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications