நான் உதயநிதியை பற்றி பேசினால்.. ஸ்டாலினுக்கு பிபி எகுறுதே.. அமித்ஷா அட்டாக்
நெல்லை: உதயநிதியை பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகிறது, தமிழகத்திற்கு பாடுபடும் கட்சிகள் அதிமுக பாஜக. ஆனால் திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக பாடுபடுகிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லையில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்,.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வெளியூர்களில் பிரச்சாரம் செய்த பல்வேறு தலைவர்கள், தங்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர்கள் உள்பட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிற்பகலில் நெல்லைக்கு வந்தார்.
நெல்லையப்பர் பூமி
நெல்லையில்.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் ஜெரால்டு ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையாக உள்ளது.
எடப்பாடிக்கு பாராட்டு
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சாமானிய மக்களின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாமானியர்களின் கனவை நிறைவேற்றியு உள்ளார். பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி கொண்டுவந்தார். தமிழக கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விவசாயிகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், தமிழக மீனவர்களை பற்றி சிந்திப்பவர்.
சிறப்பாக செயல்பாடு
குடியரசு தலைவர் பதவியில் பட்டியல் பிரிவை சேர்ந்தவரை அமர வைத்துள்ளோம். 7 பிரிவை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்பை கொடுத்தவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் உள்ள ஏழைகள், பாமர மக்களை உயர்த்த வேண்டும் என்ற கொள்கையில் பிரதமர் மோடி உள்ளார். தமிழக முதல்வரும் துணை முதல்வரும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மோடி தனது பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார் சென்னை மெட்ரோ ரயிலுக்கு 30,000 கோடி ஒதுக்கியுள்ளார்.
திமுக 3ஜி
காங்கிரஸ் 4ஜி போன்று நான்கு தலைமுறைகளாக இந்த தேசத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் நடைபெறும் யுத்தம் தான் இந்த தேர்தல். இன்னொரு குடும்பம் உள்ளது தமிழகத்தில், கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி 3 ஜி குடும்பம். உதயநிதியை முதல்வராக்க முயற்சி செய்யும் கட்சி திமுக. அது குடும்ப கட்சி, பணக்கார கட்சி, ஆனால் பாஜக ஏழைகளை மையமாக வைத்து வளர்ந்துள்ளது.
தாயை கேவலமாக பேசினார்கள்
ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும் தான் கவலை மகனை முதல்வராக்க வேண்டும் என்ற கவலை. ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் பெருமை, இறந்தவர்களை விமர்சிப்பது கிடையாது ஆனால் திமுகவில். இறந்த பெண்மணியான முதல்வரின் தாயாரை கேவலமாக பேசும் அளவுக்கு அந்த கட்சி உள்ளது.
உதயநிதி பற்றி அமித்ஷா
நான் உதயநிதியை பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்த கொதிப்பு அதிகமாகிறது, தமிழகத்திற்கு பாடுபடும் கட்சிகள் அதிமுக பாஜக. ஆனால் திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக பாடுபடுகிறது. தமிழகத்தில் குடும்ப கட்சியான திமுகவுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும்" இவ்வாறு நெல்லையில் பிரச்சாரத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.