எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்.. இதுதான் முடிவு.. "கட் அண்ட் ரைட்டாக" சொன்ன அப்பாவு
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை: வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும்.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது. எதிர்க்கட்சியினரே துணைத்தலைவர் இருக்கை விவகாரம் பற்றி பேசாமல் இருக்கும்போது அவர்களை உசுப்பேத்தி விடுகிறீர்கள் என்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது" என்றும் கூறினார். செய்தியாளர்களிடம் அப்பாவு மேலும் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 20-ம் தேதி கூடுகிறது. எந்தவித சலசலப்பும் இல்லாத வகையில் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அனைவருக்கும் போதிய நேரம் வழங்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். நெல்லை மாவட்டத்துக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தெரியும். அதன்படி பல்வேறு திட்டங்கள் நெல்லை மாவட்டத்தில் கொண்டு வரப்படும்.

ரூ.3 லட்சம் கோடி வரை மூதலீடுகள்
நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த 2006-ம் ஆண்டு பணிகளை தொடங்கும் முன்னர் 10 ஆண்டு கால ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று இதுவரை 3 லட்சம் கோடி ரூபாய் வரை மூதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் 20 மாத காலமாக சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்
மகளிருக்கான உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். எனவே விரைவில் நல்ல அறிவிப்பு வரும். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது எனது உரிமை. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் முடிந்து விட்டது. எதிர்க்கட்சியினரே எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் பற்றி பேசாமல் இருக்கும் போதும் நீங்கள் அவர்களை உசுப்பேத்தி விருகிறீர்கள்.

ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும்
ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 21 வரை அதிமுகவை சேர்ந்த இன்பதுரை வழக்குகள் தொடுத்து 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்து விட்டார். நீதிமன்ற உத்தவுப்படி நடத்தப்பட்ட மறு ஓட்டு எண்ணிக்கையில் நான் 94 ஓட்டுகளில் வெற்றி பெற்றேன். ஆனால் அவர் மக்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம் வாங்கி கொண்டிருக்கிறார். ஜனநாயக மரபு பற்றி அவர் பேச வேண்டுமென்றால் அவர் வகித்த பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும்" இவ்வாறு அப்பாவு கூறினார்.

எத்தனை நாட்கள் பட்ஜெட்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவை தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications