மலையை சாய்ச்சிட்டாங்க.. கேபிகே ஜெயக்குமார் தற்கொலையா? ஆவேசமாக பேசிய 20 ஆண்டு கால நண்பர்
நெல்லை: ஜெயக்குமார் ஒரு மலை.. மலையையே சாய்த்துவிட்டார்கள். ஜெயக்குமார் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. இந்த படுகொலையை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது தெரியும் வரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்று அவருடன் 20 வருட காலம் நெருங்கி பழகிய கட்சி தொண்டர் சிவாஜி முத்துகுமார் கூறியுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கிய இவர் மே 2ம் தேதி முதல் ஜெயக்குமார் திடீரென மாயமாகிவிட்டார். ஜெயக்குமாரின் வீடு அமைந்துள்ளது கரைச்சுத்து புதூர். எனவே ஜெயக்குமார் மகன் கருத்தய்யா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில்தான் இன்று உவரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெயக்குமாரின் தோட்டத்திற்கு உள்ளே, அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நெல்லையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் இன்று அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். கேபிகே ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யபட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேக மரணம் என்ற பெயரில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் தனசிங் புகார் அளித்ததாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. ஆனால், தனக்கும் அவருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை எதுவும் இல்லை எனவும் இந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரூபி மனோகரன் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்து இருக்கிறார்.
கேபிகே ஜெயக்குமார் மரணம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிலம்பரசனுக்கு அனுப்பிய மனுவில், தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், போலீசார் இதன்படி செயல்படவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜெயக்குமார் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை என்று அவருடன் நெருங்கிய பழகிய கட்சி தொண்டர் கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
என் பெயர் குட்டா சிவாஜி முத்துகுமார் காங்கிரஸ் கட்சியி இருக்கிறேன். அண்ணன் கேபிகே ஜெயக்குமாருடன் 20 வருடமாக நான் இருக்கிறேன். அவர் ஒரு கோழை கிடையாது. தற்கொலை என பேசிக்கிறாங்க.. அது உண்மை கிடையாது. எத்தனையோ பேருக்கு வாழ்வளித்தவர். அவர் ஒரு மாவீரன். அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி.. எதையும் சந்திக்க கூடியவர்.
30 ஆம் தேதி எஸ்பி ஆபிசில் ஒரு புகார் அளித்ததாக சொல்கிறார்கள். அதில் நடவடிக்கை இல்லை. ஒருவேளை நடவடிக்கை எடுத்து இருந்தால் அவர் காப்பாற்ற பட்டு இருக்கும் என நம்புகிறோம். காவல்துறை இதை உடனடியாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த படுகொலையை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அது தெரியும் வரை அடக்கம் செய்ய விடமாட்டோம்.
குற்றவாளிகளை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற கொலைகள் இனி தொடரக்கூடாது. ஜெயக்குமார் ஒரு மலை.. மலையையே சாய்த்துவிட்டார்கள். எந்த மதமாக இருந்தாலும் சரி.. எந்த சாதியாக இருந்தாலும் சரி.. எல்லோரிடத்திலும் அன்பு காட்டக்கூடிய கேபிகே ஜெயக்குமார் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications