300 அடி பள்ளம்.. நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. மீட்பு பணி தீவிரம்.. என்ன நடந்தது?
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கல்குவாரி உள்ளே சிக்கி இருக்கும் ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
திருநெல்வேலி மாவட்டம் முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் அந்த தனியார் கல்குவாரியில் உள்ளது. இங்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
மேலே இருக்கும் பாறைகள் உடைந்து அப்படியே குவாரி உள்ளே விழுந்துள்ளது. மழை காரணமாக இந்த பாறைகள் உடைந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருநெல்வேலி
அதிர்ஷ்டவசமாக கீழே இருந்த ஊழியர்கள் பலர் மழை காரணமாக முன்பே வெளியேறிவிட்டனர். 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் இருந்துள்ளன. இதில் 6 ஊழியர்கள் மழைக்காக ஒதுங்கி உள்ளே இருந்துள்ளனர். கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் இருந்த கிட்டாச்சிக்கு மேலே பாறைகள் விழுந்துள்ளன.
மழை
இதை பார்த்து சுதாரித்து வெளியேற வரும் முன் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், ஆகிய இருந்த லாரி மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளன. இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் மேலே இருந்த ஊழியர்கள் மூலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு உடனே வந்த ஊழியர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
300 அடி பள்ளம்
300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இரவு நேரம் என்பதால் நேற்று இங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வது கடினம் ஆனது. அதேபோல் நேற்று இரவு அங்கு மழை பெய்ததால் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல் 300 அடி பள்ளம் என்பதாலும் ஊழியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராட்சச கிரேன்கள்
திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து தற்போது ராட்சச கிரேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கிரேன்கள் குவாரி உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் உள்ளே இருக்கும் பாறைகள் அகற்றப்பட்டு அதன் மூலம் மீட்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கல்குவாரியில் 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.