எல்லாம் நலம்.. மதிமுக தொண்டர்களுக்கு நல்ல செய்தி! உடல்நலம் தேறிய வைகோ..இன்று வீடு திரும்புகிறார்..!
நெல்லை: கடந்த வாரம் மதிமுக நிர்வாகியின் இல்லத்தில் வைகோ தடுமாறி விழுந்ததில், தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று வீடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வைகோ அங்கு நிர்வாகியின் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது வீட்டின் மாடிக்குச் செல்வதற்காக படிக்கட்டில் ஏறிய போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
வைகோ: இதனையடுத்து வைகோவின் வயது மற்றும் உடல்நிலை கருதி அவரை விமான மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வைகோ சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் லேசான எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.
அறுவைச் சிகிச்சை: இந்நிலையில் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார். தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
கோரிக்கை: இந்நிலையில் வைகோவுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே மதிமுக தொண்டர்களும், வைகோவின் நலம் விரும்பிகளும் அவரை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டுமென அவரது மகன் துரை வைகோ கூறியிருந்தார்.
வீடு திரும்புகிறார்: இந்நிலையில் அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வைகோ இன்று வீடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை மாலை வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சென்னை வீட்டில் ஓய்வெடுக்கவுள்ளார் வைகோ என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications