நெல்லை -தூத்துக்குடி மாவட்ட மக்களே! இன்னும் 7 மாதம் தான்! உங்கள் கனவுத் திட்டம் நிறைவேறப் போகுது!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான தாமிரபரணி -கருமேனி - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தச் சென்ற அவர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அவர் இது குறித்து கூறியிருப்பதாவது;

''நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை புயல் வேகத்தில் நடந்து வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
பொது மக்களின் நலனிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முன்னெடுத்து திட்டத்தை விரிவு படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவித்தார்.மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 67 கிலோ மீட்டர்நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கும் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆய்வு செய்ததன் அடிப்படையில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதம் மழை காலங்களில் இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது 17.002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உள்பட 23040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரும்.
இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் முறையாக பணம் வழங்கவில்லை. தற்போது இடம் கொடுத்தவர்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சத கனராக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.''












Click it and Unblock the Notifications