4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க.. "ஒரு நொடி என் இதயம் நின்னே போச்சு"! காங். எம்பி உருக்கம்!
நெல்லை: நாங்குநேரியில் மாணவர்கள் வெட்டப்பட்ட சின்னதுரையின் தங்கை தனது வாக்குமூலத்தில் "4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க" என கூறும்போது ஒரு நொடி என் இதயம் நின்றே விட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தெருவில் வசித்து வரும் முனியாண்டி அம்பிகா தம்பதியரின் மகன் சின்னதுரை. வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் சின்னதுரை நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்துள்ளார். இந்நிலையில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சின்னதுரையுடன் மோதல் போக்கை கடைபிடித்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த வாரமும் சின்னதுரையை மிரட்டி சக மாணவர்களே அவரை அடித்துள்ளனர். இதனால், பள்ளி செல்லாமல் இருந்த சின்னதுரை, ஆசிரியர்களின் அழைப்பின் பேரில் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிக்கு வராததற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் அன்றும் பள்ளி முடிந்ததும் சின்னதுரையை மிரட்டியுள்ளனர்.
சின்னதுரையின் மீது தீராத ஆத்திரத்தில் இருந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாணவர்கள், 10ஆம் தேதியன்று சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளனர். இதைக் கண்டு திடுக்கிட்டுப் போன 14 வயது சிறுமியான சந்திரா செல்வி, தன் அண்ணனை காப்பாற்றுவதற்காக, கொலைவெறி தாக்குதல் நடத்திய மாணவர்களை தடுக்கும்போது, அந்தச் சிறுமியையும் வெட்டியுள்ளனர்.
அரிவாளால் வெட்டப்பட்டதில் இருவரது அலறல் சத்தத்தையும் கேட்டு ஓடி வந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் திர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு வந்ததில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கோரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டு துடித்துக்கொண்டிருந்த இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னதுரையை வெட்டிய 6 பேரையும் போலீசார் கைது செய்து கூர்நோக்குப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
சின்னதுரை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சின்னதுரையை சாதி வேறுபாட்டுடன் நடத்தியதும், உச்சகட்ட கொலைவெறியில் வீடுபுகுந்து வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வெட்டுப்பட்ட சின்னதுரையின் தங்கை தனது வாக்குமூலத்தில், "நீ எஸ்.சி தானே எனக் கேட்டு அம்மாவை கெட்டவார்த்தையால் திட்டி, 4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க.. ஒருவன் அண்ணன் கழுத்தில் வெட்ட வந்தபோது நான் தடுக்கப் போனேன். அப்போ என் கையில் வெட்டிட்டாங்க" எனத் தெரிவித்துள்ளது அனைவரையும் பதறச் செய்துள்ளது.
இது குறித்து விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்குநேரி சம்பவம் கேள்விப்பட்டதில் இருந்து மனம் பதைபதைக்கிறது. மாணவச் சமுதாயம் தான் நாளைய இந்தியா என்று சொல்லும் வேளையில் இது போன்று சாதி நஞ்சு அவர்களின் மனத்தில் கலந்தது வேதனைக்குரியது. சிறுமி தனது வாக்குமூலத்தில் "4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க" என கூறும்போது ஒரு நொடி என் இதயம் நின்றே விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உடனடியாக கிடைக்க வேண்டும்; மாணவர் சின்னத்துரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications