நாங்குநேரி சம்பவம்: சாதி வெறி மட்டுமே காரணம் இல்லை.. சினிமா பிரபலங்களும் தான்! விஏஓ போஸ்டால் சர்ச்சை
நெல்லை: நாங்குநேரி சம்பவத்திற்கு சாதி வெறி மட்டும் காரணம் இல்லை, சினிமா பிரபலங்களும் காரணம் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாகியாக பணியாற்றி வரும் கிருஷ்ணன் என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். சின்னத்துரை 12ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையை அவருடன் படிக்கும் மாணவர்கள் சாதிய பாகுாட்டை காட்டி படிக்கவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னத்துரை மனம் உடைந்து பள்ளி செல்லாமல் இருந்தார்.

இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது. இந்த கோபத்தில் சில மாணவர்கள், சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இருவரும் மீட்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களே சாதிய போக்குடன், தன்னுடன் படித்த சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர வைத்தது. இந்த சம்பவத்தையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அதுமட்டும் இன்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். முதல்வர் மு.க ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார். தமிழகத்தையே அதிரவைத்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக தங்களது கண்டனத்தை பதிவிட்டு வரும் நிலையில், பேஸ்புக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஏஓ கிருஷ்ணன் என்பவர் பதிவிட்டு இருக்கும் கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாங்குநேரியில் பள்ளி மாணவனும் அவனது சகோதரியும் கொடூரமாக வீடுபுகுந்து இன்னொரு மாணவனால் தாக்கப்பட்டதற்கு சாதிவெறி மட்டுமே காரணமல்ல.
சினிமா மெகா சீரியல்களில் வரன்முறை மீறி செயற்கையாக புகுத்தப்படும் வன்முறைகாட்சிகளும் இதுபோன்று தினமும் நிகழும் வன்முறைகளுக்கு முக்கிய காரணம். நான்குநேரி சம்பவத்தை கண்டிக்கும் சினிமா பிரபலங்கள், தங்கள் துறையை சீர்படுத்த முதலில் அக்கறை காட்ட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications