நாங்குநேரி சம்பவம்.. மாணவர்கள் கைகளில் சாதி கயிறு... நெல்லை கலெக்டர் அதிரடி உத்தரவு
திருநெல்வேலி: நாங்குநேரியில் பிளஸ் 2 படிக்கும் பட்டியல் இன மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் சாதி ரீதியான கயிறுகளை அணிவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடலை பால பருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்பட்டாலும் மாணவர்களின் மனதில் சாதி நஞ்சை விதைப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதுவே மாணவர்கள் இடையே மோதலை உருவாக்குகிறது.

வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பில் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் சின்னதுரை படித்து வருகிறார். அவருக்கு சாதி ரீதியான துன்புறுத்தல் பள்ளியில் இருந்துள்ளது. சைக்கிளில் காற்றை பிடுங்கிவிடுவது, தின்பண்டம் வாங்கி தர சொல்வது, அவதூறாக பேசுவது என சில மாணவர்கள், சின்னதுரையிடம் தொடர்ந்து பிரச்னை செய்யவே, அந்த மாணவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தனக்கு நேரிடும் துன்பம் பற்றி பள்ளியில் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இவ்விவகாரம் தெரியவந்த நிலையில், தொடர்புடைய மாணவர்களை காவல்துறை அதிகாரி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்கள், இரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர்.
தடுக்க சென்ற சின்னத்துரையின் தாய் அம்பிகாவதியை காலால் எட்டி உதைத்துள்ளனர். இதை கவனித்த சின்னத்துரையின் தங்கை சந்திரா செல்வி ஓடிச்சென்று தனது அண்ணனை காப்பாற்ற முயன்ற போது சந்திரா செல்வியையும் அறிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து உரிய நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சின்னதுரையின் தாத்தா திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனிடையே தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் பள்ளியில் தற்போது பயிலும் 4 மாணவர்களையும் 2 முன்னாள் மாணவர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சாதிய மோதல் ஏற்பட்ட பள்ளியில் விரிவான விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்க தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் சாதிய மோதல்கள் உள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அப்பள்ளிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே போன்று, பள்ளியில் மாணவர்கள் சாதி ரீதியான கயிறுகளை அணிவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கு மனநல கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications