நகராட்சி ஆணையரிடம் கட்சி நிதி கேட்ட நெல்லை திமுக நிர்வாகி...!
சென்னை: நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன் தென்காசி நகராட்சி ஆணையரிடம் கட்சி நிதி கேட்டு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக நெல்லை மேற்கு மாவட்டச்செயலாளராக இருப்பவர் சிவ பத்மநாபன். இவர் தென்காசி நகராட்சி ஆணையர் ஏகராஜிடம் கட்சி நிதி கேட்டு போனில் மிரட்டல் விடுத்த விவகாரம் தான் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
கட்சி கூட்டம் நடத்துவதற்கு நகராட்சி ஆணையர் ஏகராஜிடம் பணம் வசூலித்து வருமாறு சிவ பத்மநாபன் தனது ஆட்களை அனுப்பியுள்ளார்.

தரமுடியாது
திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் அனுப்பிய ஆளிடம், தன்னால் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே தர முடியும் என்றும், அவர் கேட்பது போல் ஐம்பதாயிரம் எல்லாம் தர முடியாது எனவும் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.

அதட்டல்
இதையடுத்து ஏகராஜிடம் தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்புகொண்ட சிவபத்மநாபன், நீங்க பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக இருந்தால், கொடுக்க வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்..நகராட்சி
யில் நடக்கும் ஊழல்கள் எல்லாம் எனக்குத் தெரியாது என நினைக்கிறீர்களா, இப்பத்தான் நகராட்சி சார்பாக வேலையெல்லாம் நடக்குது, அதெல்லாம் தெரிந்து தானே கேட்கிறேன் என்றுள்ளார்.

புகார்
மேலும், நீங்க பணம் தர வேண்டாம் சார், இதை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதோடு, நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக தன்னிடம் ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஆணையர் ஏகராஜ், தன்னிடம் வசதி இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றும், வேண்டுமென்றால் இருபதாயிரம் ரூபாயாக தருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வேதனை
ஆனால் கொடுத்தால் ஐம்பதாயிரத்துக்கு குறையாமல் கொடுங்கள் இல்லையென்றால் வேண்டாம் என்றுள்ளார் சிவபத்மநாபன். திமுகவை பற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்து வரும் நிலையில், இது போன்ற ஒன்றிரண்டு நிர்வாகிகளால் ஒட்டுமொத்த கட்சியும் களங்கத்தை சுமக்க வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications