ஒரு வாரத்துக்கு முன்பே வந்த மிரட்டல்? ‘மரண வாக்குமூலம்’ என கடிதம் எழுதிய ஜெயக்குமார்.. திடுக் தகவல்
நெல்லை: எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஒரு வாரத்திற்கு முன்பே "மரண வாக்குமூலம்" என எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இன்று உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, கடந்த வாரத்துக்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், முன் விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய பலர் நோட்டமிடுவதாகவும் கூறி ஜெயக்குமார் தனசிங் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்து இருக்கிறார். மரண வாக்குமூலம் என்ற பெயரில் அந்த கடிதத்தில் ஜெயக்குமார் தனசிங் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த கடிதத்தை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுக்க ஜெயக்குமார் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுவரை அந்த புகார் கடிதம் தன்னிடம் கொடுக்கப்படவில்லை என்று நெல்லை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மரண வாக்கு மூலம் என கடிதம் எழுதியுள்ள ஜெயக்குமார் அந்தக் கடிதத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சி பணிகளை தீவிரமாக ஜெயக்குமார் மேற்கொண்டு வந்துள்ளார். தேர்தலின் போது பல லட்சம் செலவு செய்து வந்ததாகவும் பல்வேறு இடங்களில் பணம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்கள், தொலபேசி எண்கள் ஆகியவற்றையும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நில விவகாரம் தொடர்பாக தனக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும் தன்னிடம் வாங்கிய பணத்திற்காக நிலத்தை எழுதி கொடுத்த ஒருவரும் மும்பை ரவுடியை வைத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு இருந்திருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பே மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு நாங்குநேரி MLA மற்றும் கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் ஆகியோர் பெயரை குறிப்பிட்டுள்ளதால் ஜெயக்குமார் தனசிங் மரணம் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்பிக்கு எழுதி வைத்திருந்த கடிதத்திலும் சில முக்கிய நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எனவே தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த புகார் மனுவை எஸ்பி அலுவலகத்தில் கொடுப்பதற்கு முன்பாகவே ஜெயக்குமார் தனசிங் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மாவட்ட தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து இருக்கிறார். திசையன்விளை சுற்று வட்டார பகுதியில் பிரபலமான தொழில் அதிபராகவும் அறியப்பட்ட ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை என்றால் அரசியல் காரணமாக அல்லது தொழில் போட்டியா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நெல்லை மாவட்ட எஸ்பியும் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications