நெல்லை கவின் வழக்கு.. சம்பவம் எப்படி நடந்தது.. தத்ரூபமாக நடித்து காட்டிய சுர்ஜித்திடம் 50 கேள்விகள்
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் 2 பேரிடமும் கேட்கப்பட்டன. ஒரே கேள்விக்கு இருவரும் சரியாக பதில் அளிக்கிறார்களா? அல்லது முரண்பட்ட பதில்கள் வருகிறதா? என்பது குறித்தும் போலீசார் கண்டறிந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின்(வயது 27) கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி நகரில் வைத்து சுர்ஜித் என்ற வாலிபால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது வழக்கை சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
அதன் ஒரு பகுதியாக சிறையில் இருந்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை மாவட்ட 2-வது அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கு 2 நாள் அனுமதி அளித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோர் பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தனித்தனியாக விசாரணை
தொடர்ந்து நள்ளிரவு வரை அவர்களிடம் டிஎஸ்பிராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று காலை முதலே மீண்டும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய 2 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிபிசிஐடி போலீசார் அடங்கிய குழுவினர் வந்திருந்தனர். இதனால் சிபிசிஐடி போலீஸ் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அங்கே போலீசார் தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே சென்ற போலீசார் சோதனைகளுக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆயுதப்படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் சிபிசிஐடி அலுவலக வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலகத்தின் வாசல் கதவும் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் நெல்லை துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், மதுரை போலீஸ் சூப்பிரண்டு அருணாச்சலம் இன்ஸ்பெக்டர்கள் உலக ராணி, பார்வதி, சேகர், சந்தான லட்சுமி மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
50 கேள்விகள்
இந்த கொலைக்கு யாரேனும் சதி திட்டம் தீட்டி கொடுத்தார்களா? முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட கொலையா? வேறு யாரேனும் கொலையில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்த 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் 2 பேரிடமும் கேட்கப்பட்டன. ஒரே கேள்விக்கு இருவரும் சரியாக பதில் அளிக்கிறார்களா? அல்லது முரண்பட்ட பதில்கள் வருகிறதா? என்பது குறித்தும் போலீசார் கண்டறிந்தனர்.
சம்பவம் எப்படி நடந்தது
விசாரணையின் இறுதியில் கவினை வெட்டி கொலை செய்த பாளை கே.டி.சி நகர் சம்பவ இடத்திற்கு 2 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதே நேரம் சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ஜவகர் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வந்து இன்று பிற்பகலில் நெல்லை வந்தார். அவரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள சுர்ஜித், மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications