Nellai Kavin: அந்த அம்மாவை கைது பண்ணனும்.. அதுவரை என் மகனின் உடலை வாங்க மாட்டேன்! நெல்லை கவின் தந்தை
தூத்துக்குடி: நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் அம்மாவை கைது செய்யும் வரை எனது மகனின் உடலை வாங்க மாட்டேன் என்று கவினின் தந்தை செல்வகணேஷ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சந்தித்து கவினின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நிலையில், கனிமொழியிடமும் இதே கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தம்பி சுர்ஜித் கவினை வெட்டி படுகொலை செய்தார்.

இதன்பின் சுர்ஜித் நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை எஃப்ஐஆரில் சேர்த்தனர். இவர்கள் இருவரும் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல்லை கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு கொலையாளி சுர்ஜித் தந்தை சரவணனை போலீசார் கைது செய்தனர். உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனையும் செய்தனர்.
இதனிடையே படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்காமல் அவரின் குடும்பத்தினர் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாட்களாகியும் இதுவரை உடலை வாங்கவில்லை. தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கவினின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், கனிமொழி தரப்பில் குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம். அவரின் தந்தையைக் கைது செய்துவிட்டோம். தாயையும் கைது செய்துவிடுவோம் என்று கூறினார்கள். நான் ஒரே வார்த்தையில், சுர்ஜித் தாய் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே கூறினேன். அதுமட்டும் தான் எங்களின் கோரிக்கை.
அதுவரை என் மகனின் உடலை வாங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கவினின் காதலி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவின் கொலைக்கும் என் பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதனை இத்துடன் விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications