பூணூல் அறுப்பு சம்பவமே நடக்கல.. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நெல்லை போலீசார் பரபர அறிக்கை!
நெல்லை: நெல்லையில் இளைஞரின் பூணூல் மர்ம நபர்களால் அறுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகாரில் குறிப்பிட்டபடி, சம்பவம் எதுவும் நடக்கவில்லை என நெல்லை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் பூணூல் அணிந்து வெளியே சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி பூணூல் அணியக் கூடாது என மிரட்டல் விடுத்து, பூணூலை அறுத்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சிறுவனின் பூணூல் அறுக்கப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாஜக கண்டனம்: இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "நெல்லை டிவிஎஸ் நகரில் இளைஞரின் பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத் தக்கது. வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்ற நபரிடம் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்பட்ட இளைஞரின் வீட்டுக்கே நேரில் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், "திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு - இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? கள்ள மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள்.
நேரில் போன எல்.முருகன்: திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரை சார்ந்த சிறுவனை தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, 'இனி பூணூல் அணியக்கூடாது' என்று மிரட்டியும் சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அவரது இல்லத்துத்துக்கு சென்று ஆறுதல் கூறினேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஓர் மதத்தவரின் புனித பொருட்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவது, கேலி செய்வது ஆகியவை பெரும் குற்றமாகும். ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத சிறு கும்பல் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்த செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து அந்த திரைமறைவு கருப்பு நபர்களையும் சட்டத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும்." எனத் தெரிவித்திருந்தார்.
போலீசார் மறுப்பு: இந்நிலையில், நெல்லையில் இளைஞரின் பூணூல் மர்ம நபர்களால் அறுக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகாரில் குறிப்பிட்டபடி, சம்பவம் எதுவும் நடக்கவில்லை என நெல்லை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS நகரில் கடந்த 21.09.2024 ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து அகிலேஷ் என்ற இளைஞரின் பூணூலை அறுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் 460/24 CSR பதிவு செய்யப்பட்டது.
இப்படி ஒரு சம்பவமே நடந்ததாக தெரியவில்லை: இந்தப் புகார் தொடர்பாக காவல் துறையினரால் அன்றைய தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட சாலையிலும் உள்ள CCTV காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணூலை அறுத்ததாக புலப்படவில்லை.
மேற்படி CCTV காமிரா பதிவுகளை பார்வையிட்டதில் இருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததில் இருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications