ஜாதிய அடையாளங்களுடன் வந்தால் உடனே FIR.. நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தையொட்டி காவல்துறை எச்சரிக்கை!
நெல்லை: நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது, ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வரக்கூடாது என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயில் உள்ளது. இங்கு ஆனி பெருந்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த நேரத்தில் 570 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்கள் பக்தர்களால் நான்காவது வீதிகளிலும் இழுத்து வரப்படும். இந்த ஆண்டு தேரோட்டம் வரும் 8 ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 8 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும். தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications