நெல்லை டூ சென்னை.. இறங்கியடிக்கும் வந்தே பாரத் ரயில்.. வாவ் வசதி.. சாப்பாடு தர்றாங்களா? அப்ப கட்டணம்
நெல்லை: நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால், திருநெல்வேலி மக்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்... இதையடுத்து, தெற்கு ரயில்வே திருநெல்வேலி - சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டது..
நவீன வசதிகள்: சமீபத்தில், தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சொல்லும்போது, "சென்னையில் இருந்து நெல்லைக்கு முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ஆனால், திண்டுக்கல் - மதுரை - நெல்லை இடையிலான தண்டவாளத்தை 1330 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும்" என்று கூறியிருந்தார்.
நவீன வசதிகளுடன் வந்தே பாரத் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்ததால், இதற்கான எதிர்பார்ப்புகள் எகிறின.. நெல்லை சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அதில் "ஏசி" சேர் கார் பயண கட்டணம் 3000 ரூபாய் வரையும், எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையும் இருக்கலாம் என்றும் தகவல்கள் பரபரபத்தன.
அதைவிட முக்கியமாக, அந்த கட்டணத்தில் பயணிகளுக்கான உணவும் வழங்கப்படும் திட்டம் இருப்பதாகவும் வெளியான தகவல், பொதுமக்களிடம் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு சென்றது.
4 வந்தே பாரத்: இப்படிப்பட்ட சூழலில்தான், ரெயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வந்துள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்திலேயே, 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டெல்லி-சண்டிகருக்கும் (243 கிலோ மீட்டர் தூரம்), சென்னையில் இருந்து 622 கிலோமீட்டர் தூரம் கொண்ட நெல்லைக்கும், குவாலியரில் இருந்து 432 கிலோ மீட்டர் தூரத்தில் போபாலுக்கும், லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ்க்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, புதிய வந்தே பாரத் ரயிலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சிறப்புகள்: இந்த ரெயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது. இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயிலானது இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். இதில் 1 பெட்டி விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 புறமும் தலா 2 இருக்கைகள் அமைந்திருக்கும்.
அதேபோல் மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கைகளும், மற்றொரு புறம் 2 இருக்கைகளும் என ஒரு வரிசையில் 5 அல்லது 6 இருக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியுமாம்.. வெயிட்டிங் லிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடையாது என்கிறார்கள்.. விஐபி பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது.
மறுமார்க்கம்: இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா சொல்லும்போது, பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு, சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இப்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும்.
மகிழ்ச்சி: இதனால் பயண நேரம் 2 மணி நேரம் முதல் 2.30 மணி நேரம் வரை மிச்சமாகும். குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் வந்தே பாரத் நின்று சென்றால் கூடுதல் நேரம் மிச்சமாகும் என்றார். இந்த தகவல்களை எல்லாம் கேட்டு திருநெல்வேலியே திக்குமுக்காடி போயுள்ளது. அத்துடன், நெல்லைக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில், இந்த மாதமே இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால், தென்மாவட்ட மக்களே குஷியில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications