வள்ளியூருக்குள் போக முடியாது! பஸ்ஸ விட்டு இறங்கலைன்னா அடிச்சிடுவேன்.. பயணியிடம் எகிறிய கன்டெக்டர்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு அரசு பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என்ற உரிய உத்தரவு இருந்தும் உள்ளே செல்ல முடியாது என பேருந்து நடத்துநர் பயணியிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ளது வள்ளியூர். இங்குள்ள பேருந்து நிலையத்தை நம்பித்தான் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் இருக்கிறார்கள். நெல்லை டூ நாகர்கோவில் இடையே முக்கிய நகரமாகவும் வள்ளியூர் விளங்குகிறது.

இவ்வழியாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இவை அனைத்தும் வள்ளியூருக்குள் வந்து செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நெல்லையிலிருந்து வள்ளியூர் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்துகள் வள்ளியூரை புறக்கணித்துவிட்டு புறவழிச் சாலை வழியாக செல்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
வள்ளியூருக்குச் செல்லாமல் வயதானவர்களை புறவழிச் சாலையிலேயே இறக்கிவிட்டு செல்வதால் அவர்கள் அங்கிருந்து வள்ளியூர் செல்ல கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது போல் அரசு பேருந்துகள் வேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள். அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். மதுரை மண்டலம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த பேருந்துகள் வள்ளியூருக்கு வருவதே இல்லை என்கிறார்கள்.
அரசு குறைந்த செலவில் மக்கள் பயணிக்க அரசு பேருந்துகளை இயக்கினால் அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் நாகர்கோவில் இருந்து வள்ளியூருக்கு டிக்கெட் கேட்டால் திருநெல்வேலிக்குத்தான் டிக்கெட் தருகிறார்கள் என பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
வள்ளியூர் பைபாஸிலும் சில பேருந்துகள் நிற்பதே இல்லை. நாகர்கோவிலிருந்து நெல்லைக்கு ரூ 50 டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மீண்டும் வள்ளியூர் செல்ல ரூ 40 கூடுதலாக செலவிட வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் வள்ளியூர் செல்ல அரசாணை வெளியிட்டும் போவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை- திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து புறநகர் பேருந்துகளும் குளிர்சாதன பேருந்துகள் உள்பட வள்ளியூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று (போகும்போதும் வரும் போதும்) பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும்.
தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து நெல்லை அல்லது நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன பேருந்துகள் உள்பட நாங்குநேரி வள்ளியூர் மற்றும் பணகுடி ஊருக்குள் சென்று (போகும் போதும் வரும் போதும்) பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும் என்ற ஆணை இருந்தும் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் வள்ளியூருக்குள் வருவதில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு பேருந்தில் ஏறிய பயணி வள்ளியூர் செல்லுமாறு கேட்டுள்ளார். ஆனால் கன்டெக்டர் , வள்ளியூர் செல்லாது என கூறியுள்ளார். இதற்கு அந்த பயணி, வள்ளியூருக்குள் போக வேண்டும் என்ற உரிய ஆணை இருந்தும் ஏன் போக முடியாது என்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தார்.
அதற்கு அந்த நடத்துநர், "உங்கள் ஊருக்குள் பஸ் போகாது, இப்போ கீழ இறங்கலைன்னா அடிப்பேன் என்றார். மேலும் உரிய ஆணை இருந்தாலும் வள்ளியூருக்குள் போக முடியாது என சொன்ன நடத்துநர், அந்த பயணியை இறங்க சொல்லி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications