நடத்துனரை எப்படி அடிக்கலாம்.. களத்தில் குதித்தது மாநில மனித உரிமை ஆணையம்.. போலீசாருக்கு நோட்டீஸ்
Recommended Video
நெல்லை: அரசு பேருந்து நடத்துனரை, ஆயுதப்படை போலீசார் இருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தில் வரும் 29-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது, குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட காவல் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் இவ்விரு காவலர்களும் பயணம் செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்துநர் ரமேஷ் என்பவர், பயணச் சீட்டை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பணிநிமித்தமாக செல்வதாக கூறியுள்ளனர்.
இருப்பினும், உரிய ஆவணத்தை போலீசார் காண்பிக்கவில்லை என தெரிகிறது. எனவே, இதுதொடர்பாக நடத்துனருக்கும் ஆயுதப்படைக் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் இருவரும் நடத்துநர் ரமேஷை சரமாரியாகத் தாக்கியதில் அவர் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
இதையடுத்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில், பஸ் நடத்துனர் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், நடத்துனரும், காவலர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்ற காட்சிகளும் உள்ளன. எனவே காவலர்கள் அளித்த புகாரின் பேரில் நடத்துனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.