பிரம்படி.. செருப்படி.. நெல்லை நீட் பயிற்சி மையத்தில் கொடூரம்! விடுதியை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்!
நெல்லை: நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி மையம் என்ற பெயரில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி விடுதி நடத்தியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது விடுதி பூட்டப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமத் வெட்டியாடன் என்பவர் சென்னையில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி வந்த அவர் ஜல் மீட் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 12 மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவன் ஒருவன் தூங்கியதாக கூறப்படுகிறது. அதனால் ஜலாலுதீன் அந்த மாணவனை தாக்கியுள்ளார்.
இதனால் அந்த மாணவனுக்கு உடலில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் செருப்பை ஒழுங்காக அடுக்கவில்லை என மாணவி ஒருவர் மீது செருப்பை வீசி உள்ளார் ஜலாலுதீன். இந்த நிலையில் மாணவர்கள் அனுபவித்து வரும் கொடுமை குறித்து அங்கு பணிபுரிந்த அமீர் உசேன் என்பவர் இந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினருக்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து ஜலால் அகமது கேரளா தப்பிச் சென்றார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மனித உரிமை ஆணைய அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் இதுதொடர்பாக போலீசாரும் சம்மன் அனுப்பி விசாரணையை துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பயிற்சி மையத்தின் விடுதி முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து விடுதியை ஏன் மூடக்கூடாது என அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நோட்டீஸ் குறித்து விடுதி மற்றும் நீட் பயிற்சி மையத்தின் நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில் அந்த விடுதி மூடப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications