விஜய், கூட்டணி பற்றி என்னிடம் கேட்காதீர்கள் - டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்
திருநெல்வேலி: பீகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இப்போதல்ல எப்போதுமே பொம்மையாகத்தான் இருக்கிறது. மக்கள் பிரச்சனையை பற்றி கேளுங்கள் என்னிடம் விஜய் குறித்தும், கூட்டணி குறித்தும் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தியின் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது. அரசியலில் மட்டுமல்ல, தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது.

தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்
தேர்தல் ஆணையமும், நீதிபதிகளும் ஜனநாயக நாட்டில் நேர்மையான, முறையான தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான், நாங்கள் தேர்தலில் நிற்பதற்கே ஒரு அர்த்தம் இருக்கும். கண்கூடாகவே ஓட்டுக்கு காசு கொடுப்பது, தப்பு நடக்கிறது என்று அனைத்தும் தெரிகிறது. இதைப் பார்த்துக் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
பொம்மை தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் பொம்மையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது குறித்த கேள்விக்கு, அதெல்லாம் சும்மா. தேர்தல் ஆணையம் இப்போதுதான் பொம்மையாக இருக்கிறதா?. அது எப்போதுமே அப்படித்தான் இருக்கிறது. இது ஒன்றும் இன்றோ நேற்றோ கிடையாது. இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதுதான் பிரச்சனை.
ஓட்டுக்கு காசு
முதலில் வாக்குக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். கள்ள ஓட்டு, வாக்குத் திருட்டு அராஜகங்களை, தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் தான் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
தேமுதிகவுக்கு வரவேற்பு
2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு, மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. வெகு விரைவில் இந்த பகுதியிலும் எங்கள் பயணத்தை தொடங்குவோம். கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி பற்றி எல்லாம் நீங்களாக கற்பனை செய்துகொண்டால் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம்.
தேர்தலில் பிரேமலதா
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உரிய நேரத்தில் அதுபற்றி நாங்களே அறிவிப்போம்.
கோபமான பிரேமலதா
தவெக மாநாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு, இந்த கேள்வியைத் தவிர வேறு கேள்வியே இல்லையா. தமிழகம் முழுவதும் தினமும் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். இந்த ஒரு கேள்வியைத் தவிர வேறு கேள்வியை கேட்பதில்லை. நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்?.
மக்கள் பிரச்சனையை பேசுங்க
உப்பளத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்கிறோம். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?. கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.
மக்கள் பிரச்சனையை கேளுங்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் என்று கடும் கோபமாக கூறிவிட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications