கையில் மண்டை ஓடுகள்.. வேட்டைக்கு சென்று வந்த சாமியாடிகளால் ஷாக்கான மக்கள்.. அதிர்ந்த நெல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள சுடலை மாடசாமி கோவிலில் இரவில் வேட்டைக்கு சென்ற சாமியாடிகள் இறந்த நபரின் மண்டை ஓடு, கை எலும்பு உள்ளிட்டவற்றை தூக்கி வந்து சாமியாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடக்கும். சில கோவில்களில் ஒரு நாள், சில கோவில்களில் 2 நாள், சில கோவில்களில் 4 நாள் என்று கோவில்களை பொறுத்து திருவிழா கொண்டாடப்படும் நாட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

ஒவ்வொரு கோவில்களிலும் வழிபாடு நடத்தும் முறையில் சற்று வேறுபாடு என்பது இருக்கும். அதோடு கோவில்களில் மேளம் அடிக்கும்போது அருள் வந்து பலரும் சாமி ஆடுவார்கள்.
பல கோவில்களில் சாமியாடிகள் நள்ளிரவில் சாம பூஜையின்போது வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். கையில் தீப்பந்தம் ஏந்தி கோவிலை விட்டு வெளியே குறிப்பிட்ட தொலைவுக்கு சென்று சாமியாடிகள் மீண்டும் கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் தான் தற்போது ஒரு கோவிலில் வேட்டைக்கு சென்ற சாமியாடிகள், இறந்த நபரின் உடல் பாகங்களை தூக்கி வந்து சாமியாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே நடந்ததுள்ளது. வீரவநல்லூர் அருகே உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவிலில் சாம பூஜையின்போது சாமியாடிகள் வேட்டைக்கு சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு 3 சாமியாடிகளும் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சாமியாடியின் கையில் மண்டை ஓடு இருந்தது. இன்னொரு சாமியாடியின் கையில் சதையுடன் கூடிய எலும்பு இருந்தது. மற்றொரு சாமியாடியின் கையிலும் எரிந்த தலை இருந்தது. அதனை வாயில் வைத்து கடித்தபடி சாமியாடிகள் ஆடினர். இதை பார்த்த பக்தர்கள் ஷாக்காகினர்.
ஆனால் சாமியாடிகள் அதனை கையில் வைத்து சிறிது நேரம் கோவில் அருகே ஆடினர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்த்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். புதைத்த அல்லது எரித்த மனிதர்களின் உடல் பாகங்களை எடுத்து வந்து சாமியாடுவது சட்டவிரோதமானது. இதனால் அந்த சாமியாடிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.
முன்னதாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி என்ற கிராமத்தில் காட்டு கோவில் என்ற சக்திபோத்தி மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கொடைவிழாவிலும் சாமியாடிகள் நள்ளிரவில் வேட்டைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். கடந்த 2021ம் ஆண்டில் நடந்த திருவிழாவின்போது சாமியாடிகள் மண்டை ஓட்டை தூக்கி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சாமியாடிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மீது பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications