தென்காசி டாஸ்மாக்கால் குடிக்கு அடிமையான மகன்கள்.. கண்ணீர் விட்ட தாய்.. ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு பதிவு
திருநெல்வேலி: போதைக்கு அடிமையான மகன்களால் வேதனை அடைந்த தூய்மை பணியாளர் தாய், தயவு செய்து டாஸ்மாக் கடைய மூடுங்க.. என்று கண்ணீர் மல்க, தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மதுவுக்கு எதிராக இயக்கம் ஒன்று நமக்குத் தேவை என்று கூறியுள்ளார்.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டம் தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.இந்த கூட்டத்தில் பலரும் வந்து மனு அளித்தனர், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 475 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி ராயம்மாள் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில், "எனது கணவர் உடல்நலம் குன்றி இருக்கிறார். நான் தென்காசி நகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். நான் வசித்து வரும் காலனி வீடானது 26 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசால் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த வீடு பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தினால் நான் அந்த வீட்டில் வாழ முடியாமல் மாட்டு தொழுவத்தில் வசித்து வருகிறேன். பலமுறை அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு கொடுத்தும் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனது இரு மகன்களை கஷ்டப்பட்டு என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் மது கடையால் போதைக்கு அடிமையாகி அவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்துவிட்டு போதையில் இருந்து வருகிறார்கள். நான் வாங்கும் ரூ.400 சம்பளத்தை வைத்து மட்டுமே எனது குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறேன். இதேபோன்று தான் பலரின் வாழ்க்கை நிலையும் எங்கள் பகுதியில் இவ்வாறு இருக்கிறது.
எனவே அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும்" என்று கூறியிருந்தார். மனு அளித்துவிட்டு வந்த அவர், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க நடந்தவற்றை கூறினார். வெறும் 400 ரூபாய் ஊதியத்திற்காக நீண்ட தூரம் தினமும் பயணிப்பதாகவும், தனது மகன்கள் டாஸ்மாக் காரணமாக குடிக்கு அடிமையாகி கிடப்பதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியும் வந்தது.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசியில் துப்புரவுத் தொழிலாளியான இந்தத் தாய், தன்னுடைய இளம் வயது மகன்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், கஷ்டப்பட்டு உழைத்து தனது குடும்பத்தை எப்படி நடத்துவதாகவும் கதறி அழுதிருக்கிறார். என்னுடைய கிராமப் பயணங்களில் இந்த பெண்ணை போன்ற பல பெண்களை நான் சந்தித்து வருகிறேன். அந்த பெண்கள் தான் நம் சமூகத்தை ஒற்றுமையாக வாழ வைத்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். நமக்கு உடனடியாக மதுவுக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications