பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்.. எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்: போட்டு தாக்கிய ஸ்டாலின்
நெல்லை: நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், "பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்" என்றார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனது பரப்புரையைத் தொடங்கி, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ஸ்டாலின், தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கார் மூலமாக பிரசார கூட்டம் நடைபெறும் நாங்குநேரிக்கு சென்றார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த், நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை ஆகியோரை ஆதரித்துநாங்குநேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "வீரத்தின் விளை நிலமான நெல்லை சீமைக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் திருநெல்வேலிக்கு தற்போது வருகை தந்திருந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி எங்கே போயிருந்தார்?
வெள்ள பாதிப்பு நிதி அளித்தீர்களா? 2 இயற்கை பேரிடர்கள் வந்தபோதும் தமிழகத்திற்கு ஒரு சல்லிக் காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு பேரிடர் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ. 37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டும் இதுவரை தரவில்லை. வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளோம். பாஜக ஓரவஞ்சனை செய்யும் அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழர்களை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். மக்களாட்சியில் மக்களை அவமதித்த பாஜகவின் தோல்வி உறுயாகிவிட்டது.
ஆட்சி, பதவி இருப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமென்றாலும் ஆணவமாக பேசுவார்களா? ஒரு மத்திய அமைச்சர் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் என்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார். தமிழர்கள் என்றால் பாஜகவிற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? வன்மம்?
பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் போர்களத்தில் நாம் வெற்றி பெற மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications