நெல்லை கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! போலீஸ் கமிஷனர் உத்தரவு!
நெல்லை: நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தனது அக்காவை காதலித்ததால் பட்டியலினத்தைச் சேர்ந்த கவினை வெட்டிக் கொன்றார் சுர்ஜித்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த ஜூலை 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை கொலை செய்ததாக சுர்ஜித் என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த சுர்ஜித், கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் என்பதும், கவின் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் அவரை சுர்ஜித் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கவின் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சுர்ஜித் கவினை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக உள்ள நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கூட கவினின் பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி முன்னிலையில், இரவு 8 மணி வரை கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ள சுர்ஜித் பெற்றோர் இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துவிட்டனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
சுர்ஜித்தை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹேமா சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications