நெல்லை மேயர் மீதான புகார்! சிமெண்ட் ஆலையில் கவுன்சிலர்களிடம் தனித்தனியாக தங்கம் தென்னரசு விசாரணை!
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீதான புகார் குறித்து கவுன்சிலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது பலரும் மேயர் சரவணன் மீதான புகார்களை அடுக்கியிருக்கின்றனர். அவர்களை சொல்வதை அப்படியே கேட்காமல் இடையே சில குறுக்கு கேள்விகளையும் எழுப்பி மிரள வைத்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அதேபோல் நெல்லை மாநகர கட்சி நிர்வாகிகளிடமும் அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணை மேற்கொண்டிருக்கிறார். இந்த விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவனத்துக்கு நாளை அல்லது நாளை மறுநாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கொண்டு செல்லவுள்ளார்.
அதன் பிறகு சில அதிரடி மாற்றங்கள் அரங்கேறினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இதனிடையே நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நேற்று முன் தினம் நெல்லை மேயர் சரவணனை சென்னைக்கு நேரில் அழைத்த தலைமை கடுமையான டோஸ் விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெல்லை மாவட்ட திமுகவில் முதல்வர் ஸ்டாலின் களையெடுப்புக்கு தயாராகிவிட்டது மட்டும் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications