நெல்லை, குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது விட்டது… டிடிவி தினகரன் பேச்சு
நெல்லை: கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு பொன். ராதாகிருஷ்ணன் தூது விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.
மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை, கன்னியாகுமரியில் சிறுபான்மையினரை வேட்பாளராக நிறுத்துமாறு பாஜகவினர் நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறினார்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தங்களை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
இது நம் அம்மாவின் ஆட்சி அல்ல.. எடப்பாடி அம்மாவின் ஆட்சி.. தினகரன் கிண்டல்
மேலும், யாருடன் கூட்டணி வைக்க கூடாது என்று ஜெயலலிதா கூறினார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறுகிறார்கள் என்றும் பேசினார் மே 23-ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி ஆட்சியை மக்கள் முடித்து விடுவார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். இந்தத் தேர்தலை விட்டால் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் இல்லாவிட்டால் மோடி தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டு விடுவார் எனவும் அவர் விமர்சனம் செய்தார்.