அத்துமீற முயன்ற ஆட்டோ டிரைவர்! சிங்கப் பெண் செய்த ”தரமான சம்பவம்” நடுரோட்டில் ”துடைப்பத்தால் பூஜை”
தென்காசி : தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு நடுரோட்டில் வைத்து துடைப்பத்தால் அடித்து துவைத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அமைந்து உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கண்ணகி
இவர் நாள்தோறும் தான் வசித்து வரும் தேரடி வீதியிலிருந்து, வேலை செய்யும் அங்கன்வாடி மையம் உள்ள பகுதிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.

பாலியல் தொல்லை
இந்த நிலையில், கண்ணகி இன்று அங்கன்வாடி மையத்திற்கு செல்ல, அவர் வசித்து வரும் பகுதியில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த கண்ணன் என்பவரது ஆட்டோவில் ஏறி அங்கன்வாடி மையத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்பொழுது, ஆட்டோ டிரைவரான கண்ணன் என்பவர், கண்ணகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடும் வாக்குவாதம்
உடனே, பாதுகாப்பு கருதி ஆட்டோவிலிருந்து இறங்கிய கண்ணகி, உடனே அவரது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில், கண்ணகியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று ஆட்டோ டிரைவரான கண்ணனிடம் நியாயம் கேட்டுள்ளார்கள். அப்பொழுது கண்ணன் அவர்களிடம் ஆபாசமாக பேசவே, கண்ணகியின் கணவருக்கும், கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆனது.

துடைப்பத்தால் அர்ச்சனை
உடனே அங்கு நின்று கொண்டிருந்த கண்ணகி தான் வைத்திருந்த துடைப்பத்தால், ஆட்டோ டிரைவர் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம், இதேபோல் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு ஒருபோதும் யாரும் சப்போர்ட் பண்ணாதீர்கள் எனக்கூறியபடி, கண்ணனை துடைப்பத்தால் மேலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

நெட்டிசன்கள் பாராட்டு
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி கொடுத்த புகாரின் அடிப்படையில், செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரான கண்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என சட்டம் கூறிவரும் நிலையில், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவரை நடுரோட்டில் வைத்து தண்டித்த பெண்ணை சமூக வலைதள வாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications