திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை.. வரலாறு மாறப்போவதும் இல்லை - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: திமுகவின் முருகர் மாநாடு வெறும் கண்துடைப்பு. அவர்கள் நடத்தியது உண்மையான முருகர் மாநாடு கிடையாது. தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவின் முருகர் மாநாடு வெறும் கண்துடைப்பு. அவர்கள் நடத்தியது உண்மையான முருகர் மாநாடு கிடையாது. திருச்செந்தூரில் நடைபெறக்கூடிய கும்பாபிஷேகம்தான் உண்மையானது. எங்களுக்கான முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளைக் கல்லாக நினைத்துத் தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள் போய் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்?. மதுரையில் நடந்த முருகர் மாநாட்டில் நான்கு லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். 4 லட்சம் பேருக்கு பக்தி இல்லாதபோது, ஒருவருக்கு மட்டும் எப்படி இந்த பக்தி வந்தது?. 200 கூட்டங்கள் நடத்தி மக்களிடம் வாங்கக்கூடிய வாக்குகளை, இந்த ஒரு மாநாட்டின் மூலம் எங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.
இது முழுக்க முழுக்க ஒரு பக்தர் மாநாடுதான். நாங்கள் யாரையும் தவறான இடத்திற்குக் கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை. பிற மதங்களை புண்படுத்திப் பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை. இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களைக் குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை.
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை திமுக தனக்குச் சாதகப்படுத்த முயற்சிப்பதாகக் கேட்டபோது, இது பக்தர்களுக்குப் பொதுவானது. திமுக தனது பெயருக்காக முயற்சிக்கிறது. அவர்கள் முதலில் ஒரு முருகன் மாநாடு நடத்தினார்கள். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்துவது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால், இப்போது அவர்கள் அதை திசைதிருப்பி, திமுகவுக்குச் சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது குறித்த கேள்விக்கு, 1989 இல் எம்.ஜி.ஆருடைய மறைவுக்குப் பின்னால் ஒரு இரண்டு வருஷம் ஆட்சியில் இருந்தார்கள். 1991 இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். 1996 இல் ஆட்சிக்கு வந்தார்கள். தொடர்ந்து திமுகவினர் ஆட்சியில் இல்லை. 2001 இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
2006 இல் மைனாரிட்டி அரசு. எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால், 2011 ஆம் ஆண்டிலும், 2016-லும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்கள். தொடர்ந்து திமுக ஜெயிச்சதாக வரலாறு கிடையாது. வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்ப மாட்டார்கள். அமித்ஷா அவர்கள் கூட்டணி என்று சொன்னதில் இருந்து திமுகவினர் பயத்தில் ஒன்று சொல்லி, ஒன்றை மாற்றி மாற்றிச் சொல்லி வருகின்றனர். திமுகவினருக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.
2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். அதைப் பற்றி அமித்ஷாவும், அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள். இதில், பழனிசாமியின் பெயரைச் சொல்லாதது குறித்த கேள்விக்கு, தமிழக முதலமைச்சராக எடப்பாடி வருவார் என்று இப்போது பேசக்கூடாது. அமித்ஷா அவர்கள் ஏற்கனவே அவருடைய தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications