விசாரணையின்போது பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங்! காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. அதிரடி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது இளைஞர்களை டார்ச்சர் செய்து அவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி எஸ்பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றிய விசாரணை துவங்கி உள்ள நிலையில் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக(Assistant Superintendent of Police) ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நியமனம் செய்யப்பட்டார். 2020ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் மும்பை ஐஐடியில் பிஇ முடித்தவர்.
இவர் 2022ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் அம்பாசமுத்திரம் பகுதியில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பற்களை பிடுங்கி சித்ரவதை
அதாவது குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர் போலீஸ் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது வழக்கு விசாரணையின்போது இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

துவங்கிய விசாரணை
மேலும் பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான படங்கள் மற்றும் சித்ரவதை தொடர்பாக அவர்கள் பேசி வெளியிட்ட வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதையடுத்து பல்வீர் சிங்கிற்கு எதிராக நெட்டிசன்கள் குரல் கொடுக்க தொடங்கினர். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி இன்று விசாரணை துவங்கியது.

காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
இந்த விசாரணையின்போது குற்றச்சாட்டுக்கு உள்ளான பல்வீர் சிங் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் அறிக்கையில் பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர் மீது அதிரடி நடவடிக்கை பாய உள்ளது. இதற்கிடையே தான் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் எதிர்ப்பு
மேலும் பல்வீர் சிங்கின் நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் கண்டித்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு அவருக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விசாரணையின்போது பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இதுபற்றி மனித உரிமை ஆணையத்திலும், மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications