கொரோனா தடுப்பூசியால் சிறுமிக்கு சுயநினைவு போச்சு.. நெல்லை கலெக்டரிடம் போன பகீர் புகார்
நெல்லை: கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தனது 15 வயது மகள் சுயநினைவை இழந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது மகளை காப்பாற்றும்படி கண்ணீர்மல்க அரசுக்கு கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பருத்திப்பாட்டைச் சேர்ந்தவர் மகாராஜன். கூலித்தொழிலாளியான இவருக்கு, இருண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், 9-ம் வகுப்பு படித்து வந்த அவருடைய 2-வது மகள் நல்லத்தாய்க்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது அவர் முற்றிலும் சுயநினைவு இழந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2 லிஸ்டையும் அனுப்புங்க! ஆம் ஆத்மியை வீழ்த்தும் பாஜகவின் புது அஸ்திரம்.. சூடுபிடித்த குஜராத் தேர்தல்
தந்தை குற்றச்சாட்டு
இந்நிலையில், தனது மகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சிறுமியின் தந்தை மகாராஜன் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த தனது மகளுக்கு, பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டதால்தான் அவர் உடல் நலம் பாதிப்புக்கப்பட்டதாக கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருவது இயல்புதான் என நினைத்து, மகளின் உடல்நலத்தில் அலட்சியமாக இருந்து விட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
நாளுக்கு நாள் தொடர்ந்து தனது மகளின் உடல்நிலை மோசமடைந்ததால், அதிர்ச்சியடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்த்து மகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். எனினும், உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை என சிறுமியின் தந்தை மகாராஜன் கவலையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியால் மகள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தனது மகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு
இதனையடுத்து, பாதிக்கப்பட்டஅந்த சிறுமியின் தந்தை மகாராஜன், தாய் மற்றும் சகோதரி ஆகியோர், நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரிட்ல சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், தங்கள் குடும்பமே வேதனையில் இருப்பதாகவும், தினந்தோறும் துயரங்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஆகையால், முதலமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என மனுவில் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமியின் சகோதரி வேதனை
உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி தவித்து வரும் சிறுமியின் சகோதரி கூறுகையில், தனது தங்கையின் உடல்நலக் குறைவு, தன்னை மிகவும் பாதிப்படைய செய்துள்ளதாகவும், இதனால் தன்னால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார். தன்னை விட தனது சகோதரி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது, தங்கள் குடும்பத்தையே நிலைகுலைய செய்திருப்பதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மருத்துவமனை முதல்வர்
மாணவியின் உடல்நலம் குறித்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கூறுகையில், மாணவியின் மூளையில் காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால்தான் அந்த சிறுமியின் உடல் நிலை, இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த மருத்துவமனை முதல்வர், கொரோனா தடுப்பூசிக்கும், இந்த பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவமனையில் தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.