நெல்லை டூ சென்னை.. திருநெல்வேலிக்கே பொங்கல் சர்ப்ரைஸ் தந்த வந்தே பாரத் ரயில்.. இன்று முதல் 16 பெட்டி
திருநெல்வேலி: நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயிலின் சேவைக்கான வரவேற்பு பயணிகளிடமிருந்து ஏராளமாக கிடைத்து வரும்நிலையில், இன்று முதல் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது.

ஏசி பெட்டிகள்: அதேபோல, மறுமார்க்கத்தில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன..
வாரத்தில் செவ்வாய் தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் இந்த ரயில் கடப்பதாலும், மற்ற ஊர்களுக்கும் செல்ல நேரம் ஒத்துப்போவதாலும், பயணிகளின் பேராதரவை இந்த ரயில் சேவை பெற்று வருகிறது.
வெயிட்டிங் லிஸ்ட்: அதனால்தான், இந்த ரயிலில், வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் 100க்கும் மேல் எப்போதுமே உள்ளது. பயணிகள் இந்த ரயிலின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.. கூடுதல் ரயிலை இயக்குவதைவிட, இப்போதுள்ள 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளை இணைத்தால், மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.
அதேபோல, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதனும் வலியுறுத்தி, ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோரிடம் இதுகுறித்த வேண்டுகோளையும் எழுப்பியிருந்தார்.
ரயில்வே நிர்வாகம்: 16 பெட்டிகளை இணைப்பதால், மக்கள் பலனடைவார்கள் என்பதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், மற்ற ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் சென்னை செல்ல இந்த ரயிலை பயன்படுத்த முன்வருவார்கள்" என்றும் பத்மநாதன் கூறியிருந்தார்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று அதாவது 15ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.
தென்மாவட்டம் குஷி: தென்மாவட்ட பயணிகளுக்கு பொங்கல் பரிசாக 16 பெட்டிகளோடு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அதற்கான முன்பதிவுகளும் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டன. நாளை மறுநாள் 17ம் தேதி காலையில் சென்னைக்கு செல்வோர் மற்றும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு செல்ல, ரிசர்வேஷன்களும் நடந்து முடிந்துள்ளன.. நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பது, பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications