உடம்பெல்லாம் பற்றி எரியும் நிலையில்.. பைக்கை எடுத்து பத்திரமாக நிறுத்தியவர்.. பரபரப்பாகும் சிசிடிவி!
சீட்டு பணம் தராததால் ஒரு நபர் தீக்குளித்துள்ளார்
நெல்லை: ஒருத்தர் தீக்குளித்துவிட்டதால், உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறது.. ஆனால் அதற்கு பக்கத்திலேயே ஒருத்தர் தன் பைக்குக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று, அதை எடுத்து ஓரமாக நிறுத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமான சிசிடிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ளது சிவந்திபுரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன்... இவர் ஒரு கார்பெண்ட்டர்.
இவர் மரிய செல்வம் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு சீட்டு போட்டார்.. அதன்படியே சீட்டு பணத்தை மாசம் தவறாமல் கட்டிக் கொண்டும் வந்தார்.

பாலசுப்பிரமணியம்
நாள் ஆக ஆக பாலசுப்பிரமணியனுக்கு உடல் தளர்வு ஏற்பட்டது.. அதனால், மரியசெல்வத்திடம் தன்னால் முன்பு மாதிரி வேலை பார்க்க முடியவில்லை.. வயசாகிவிட்டது.. அதனால், சீட்டு பணத்தை தந்துவிடுமாறு கேட்டுள்ளார்... ஆனால் மரிய செல்வமோ அந்த பணத்தை தரவே இல்லை.. தரமுடியாது என்றும் உறுதியாக சொல்லாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

மரியசெல்வம்
இதனால் மனம் வெறுத்துபோன பாலசுப்பிரமணியன் சம்பவத்தன்று, மரியசெல்வம் வீட்டுககு வந்தார்.. தன் பணத்தை தர வேண்டும், இல்லாவிட்டால் சாவதை தவிர வேற வழியில்லை என்றார்.. அதையும் மரியசெல்வம் பொருட்படுத்தவே இல்லை.. இதை பார்த்து இன்னும் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீயையும் வைத்துக் கொண்டார்.

உயிரிழப்பு
தீ மளமளவென பாலசுப்பிரமணியத்தின் உடம்பெல்லாம் பரவியது.. பாலசுப்பிரமணியம் தீயில் சிக்கி வலியால் துடித்து அலறினார்.. அந்த சத்தத்தை கேட்டு அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. பிறகு அவரை ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்தியிலும், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர்.. ஆனால் சிசிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார். இது விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

பெட்ரோல்
முதல்வேலையாக, அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆராய்ந்தனர்.. அப்போதுதான், பெட்ரோலை எடுத்து பாலசுப்பிரமணியம் தன் உடம்பில் ஊற்றிக் கொள்ளும்போது, அதை நேரிலேயே அமைதியாக பார்த்து கொண்டு நின்றுள்ளார் மரிய செல்வம்.. அவரிடம் எந்த பதட்டமும், டென்ஷனும் இல்லை.

சிசிடிவி
அதுமட்டுமல்ல, உடம்பு முழுவதும் நெருப்பு பற்றிக் கொண்டு எரியும்போது, தன்னுடைய பைக்குக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று, அதை பாதுகாப்பாக நிறுத்துவதிலேயே குறியாக இருந்தார். அந்த சிசிடிவி காட்சியில் ஒரு பக்கம் நெருப்பில் துடித்து எரியும் மனித உருவம் முன்பு, பைக்கை நகர்த்த இங்குமங்கும் நடமாடுகிறது மற்றொரு உருவம்.. மனித உடல் கருகுவதை விட தன் பைக்கின் பாதுகாப்பே முக்கியம் என்று நினைத்த இந்த மிருக மரியசெல்வத்திடம் விசாரணை நடந்து வருகிறது.

கந்துவட்டி
தமிழகத்தில் இவ்வளவு நாள், சீட்டு பண பிரச்சனை, கந்துவட்டி பிரச்சனைகள் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் தலைதுக்கி உள்ளதும், உயிர்களை பலி வாங்கி கொண்டிருப்பதும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications