பேங்க்கில் பைக் லோன் எடுத்த திருவள்ளூர் பாஜக புள்ளி.. பிணமாக கிடந்தபோது உள்ளங்கையில் அந்த ரகசிய எண்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வங்கி ஊழியர்களின் அநாகரிகமான மிரட்டல் காரணமாக பாஜக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. கடன் தொல்லை தாங்காமல் பல தற்கொலைகள் நடந்து வரும்நிலையில், வங்கி மிரட்டலால் நடக்கும் தற்கொலைகளும் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. என்ன நடந்தது பொன்னேரியில்?
பொன்னேரியை சேர்ந்தவர் அரி.. பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலைவராக பணியாற்றி வருபவர்.. கார் டிரைவராக தன்னுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார்... இவர் சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து, அவரையே திருமணமும் செய்து கொண்டார்.. இப்போது இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்..

திருவள்ளூர் பாஜக புள்ளி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரி பைக் ஒன்றை புதிதாக வாங்கினார்.. இதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.. ஆரம்பத்தில் கடனை ஒழுங்காக செலுத்தி வந்த நிலையில், சில மாதங்களாக தவணைத் தொகையை செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார் அரி..
உடனே இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வங்கி ஊழியர்கள், அரிக்கு போனை போட்டு அளவுக்கு அதிகமான நெருக்கடியை= கொடுத்துள்ளனர். தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், ஆபாசமான வசவுகளையும் அரி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதை அரியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்..

பைக் எடுக்க வங்கி லோன்
சம்பவம் நடந்த பிப்ரவரி 2-ம் தேதியன்று அரியின் மனைவி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்த சூழலில், வீட்டில் தனிமையில் இருந்த அரி தற்கொலை செய்து கொண்டார்.. அரியின் சடலத்தை கண்டு குடும்பத்தினர் கதறி அடித்து அழுதனர்..
உயிரிழந்த அரியின் இறுதிச்சடங்குப் பணிகள் நடைபெற்றபோதுதான், ஒரு திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அரியின் கையில் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டிருப்பதை உறவினர்கள் கவனித்தனர். அந்த நம்பர் யாருடையது என்று ஆய்வு செய்தபோது, அது கடன் கேட்டு அரியை தொடர்ந்து மிரட்டி வந்த வங்கி ஊழியருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே அரி இப்படி கையில் நம்பரை எழுதி வைத்துள்ளதாக தெரியவந்தது.. அரியின் கையில் இருந்த நம்பரை பார்த்ததுமே கொந்தளித்து போன உறவினர்கள், நீதி கேட்டுப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.. மேலும், பொன்னேரி காவல் நிலையத்திலும் புகார் தந்தனர்..
வங்கி கடன் - போன் நம்பர்
அரியின் மரணத்திற்கு நீதி கோரியும், அத்துமீறிச் செயல்பட்ட வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் அந்த தனியார் வங்கியை முற்றுகையிட்டனர்.. போலீசார் அவர்களைச சமாதானப்படுத்தினாலும், அந்த பகுதியில் நிலவும் பதற்றம் இன்னும் தணிந்தபாடில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் தந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒரு உயிரின் மதிப்பை விட வசூல் இலக்குகளே முக்கியம் எனக் கருதும் சில தனியார் வங்கிகளின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு எளிய குடும்பத்தின் நிம்மதியைச் சிதைத்த இந்தச் சம்பவம், கடன் வசூல் முறையில் நிலவும் வன்முறைகளைத் தடுக்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலுப்பெற்றுள்ளது...!!












Click it and Unblock the Notifications