அரசியலுக்கு வந்துவிட்டால் கோபப்படக் கூடாது! ஸ்டாலினை போல் எடுத்ததும் நான் தலைவராகவில்லை! EPS பேச்சு!
திருவள்ளூர்: அரசியலுக்கு வந்துவிட்டால் கோபமே வரக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் போது தெரிவித்திருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை போல் எடுத்ததும் தாம் தலைவராகவில்லை என்றும் படிப்படியாக முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி
சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியமானது என்றும் அதிமுகவினர் ஒரு மணி நேரம் கூட வேஸ்ட் செய்யாமல் ஒவ்வொரு நிமிடமும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டுக் கேட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வெற்றிபெற்று விடலாம் என யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் அதிமுகவுக்கு ஓட்டு போடக்கூடியவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுடையது எனத் தெரிவித்தார்.

கோபம் வேண்டாம்
மேலும், அரசியலுக்கு வருபவர்கள் கோபமே கொள்ளக்கூடாது என்றும் இன் முகத்துடன் சிரித்து மக்களின் மனதை வென்றால் மட்டுமே ஏற்றம் பெற முடியும் என அட்வைஸ் கொடுத்தார். கிளைச் செயலாளரில் தொடங்கி இன்று இந்த உயரத்திற்கு வந்ததால் கீழ்நிலை நிர்வாகிகளின் கஷ்ட நஷ்டங்களை தாம் அறிந்து வைத்திருப்பதாகவும், ஸ்டாலினை போல் எளிதாக எடுத்ததும் தாம் தலைவராக வரவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

துரதிர்ஷ்டம்
தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக திமுக ஆட்சி அமைந்துவிட்டதாகவும் அதனை அகற்ற மக்கள் தயாராக இருப்பதாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குக் கேட்குமாறு வேட்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை நல்கினார். திமுக அரசு மீது அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து, இன்று ஏமாற்றம் அடைந்த நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி கோரிக்கை
நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் இதனால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications